Friday, May 23, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 7

சாவ் ப்ராயா

சாவ் ப்ராயா, தாய்லாந்தின் மத்திய நிலத்தில் பாய்ந்தோடும் ஒரு நதி. வடக்கே நக்கோன் ஸ்வான் வட்டாரத்தில் பிங், நான் ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் உருவாகும் நதி இது.  சாவ் ப்ரயா நதிக்கு இன்னொரு பெயரும் தாய் மொழியில் உண்டு.  மீ நாம் என்பது இந்த மற்றொரு பெயர்.  மி என்பது அன்னை என்ற பொருளிலும் நாம் என்பது நதி என்ற பொருளிலும் அடையாளம் காணப்படுவது. இணைத்து வாசிக்க அன்னை நதி என பொருள் பெறுகின்றது. தாய்லாந்தின் வடக்கு தொடங்கி பாங்காக் நகரைக் கடந்து 372கிமீ தூரம் பயணித்து தாய் குடாவில் கலக்கின்றது சாவ் ப்ராயா நதி.

சாவ் ப்ரயா நதி  பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பசுமைக்குக் காரணமாக இருப்பது. விவசாயமே தாய்லாந்தின் மிக முக்கிய தொழில் என்பது நாம் அறிந்ததே. ஆக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம் செழிக்க உதவும் வற்றாத நீரை வழங்கும் இச்சவ் ப்ராயா பகுதியில் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதும் அதன் பொருட்டு சாம்ராஜ்ஜியங்களும் அரசாட்சிகளும் இவ்விடங்களை மையமாகக் கொண்டு அமைந்தன என்பதனையும் காண முடிகின்றது. இப்படி சாவ் ப்ராயா நதிக்கருகில் இருக்கும் ஒரு நகரம் தான் அயோத்தையா!


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் தூற்றாண்டு வரை கிழக்காசியப் பகுதியில் தனிச்சிறப்பும் புகழும் பெற்று விளங்கிய நகரமாக அயோத்தையா விளங்கியது. பல ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய பேரரசுக்குத் தலைநகரமாக இக்காலகட்டத்தில் அயோத்தையா விளங்கியது- இந்நகரத்தில், அதிலும் குறிப்பாக சாவ் ப்ராயா நதிக்கருகே பல ப்ரமாண்டமான கோயில்களும் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. 1350ம் வருஷம் ராமாதிபோதி எனும் மன்னரால் (1351 - 1369)  அயோத்தையாவின் தலைநகரம் உருவாக்கப்பட்டது.

அயோத்தையாவுக்கு அருகில் இருக்கும் நகர் லோப் பூரி. இந்த நகரில் அக்காலகட்டத்தில் மிக விரிவாக அம்மை நோய் பரவியது. நோய்க்கு மருந்து கிடைக்காது பலர் இப்பகுதியை விட்டு வெளியேறினர்.  அப்பகுதியின் மன்னர் யூ தோங், லோப் பூரி நகரில் விரிவாகப் பரவிய அம்மை நோயிலிருந்து தன்னையும் தன்னை சார்ந்திருந்த மக்களையும் காக்கும் பொருட்டு அங்கிருந்து வெளியேறி புதிய ஓரிடத்திற்கு வந்தடைந்தார். இங்கு தனது பெயரை ராமாதிபோதி என அமைத்துக் கொண்டு தான் வந்தடைந்த நகரான அயோத்தையாவில் தனது ராஜ்ஜியத்தை அமைத்து தலைநகரை உருவாக்கி  அப்பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது வரலாறு.

மன்னர் யூதோங் பற்றி மற்றுமொரு கதையும் உண்டு. இவர் சீனதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வர்த்தகர் என்றும் தற்போதைய பாங்காக் நகர் இருக்கும் பெட்சாபூரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் வர்த்தக நோக்கில் அயோத்தையா நகர் இருக்கும் பகுதிக்கு வந்து பின்னர் மன்னரானவர் என்றும் கூறப்படுகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


15ம் நூற்றாண்டு வாக்கில் அயோத்தையா தனது ஆட்சி நிலப்பரப்பையும் ஆளுமையையும் விரிவாக்கி இப்பிராந்தியத்தில் மிகப் பிரபலமான ஒரு இடமாக உருவாகியது. அக்காலத்தில் மற்றொரு புகழ்வாய்ந்த நகரமும் மிகப் பெரிய ராஜ்ஜியமுமாக விளங்கிய  சுக்கோத்தை பேரரசியும் 15ம் நூற்றாண்டின் மத்தியில் அயோத்தையாவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. உள்ளூரிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக ஐரோப்பிய வர்த்தகர்களின் வருகை அயோத்தையாவிலும் ஏற்பட்டது. இது அயோத்தையாவின் செல்வச் செழிப்பை மென்மேலும் அதிகரித்த வண்ணம் புகழ் பெறச் செய்தது.

தாய்லாந்திற்கு முன்னர் சியாம் அல்லது சயாம் என்ற பெயர் இருந்தது என்பதை நம்மில் பலர் அறிவோம். இப்பெயர் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அயோத்தையா தான்.

1767ல் நடைபெற்ற போரில் அயோத்தையா மிக மோசமாக பர்மிய படையினரால் சேதப்படுத்தப்பட்டது. அரச மாளிகைகள் தகர்க்கப்பட்டன. இதன் பொருட்டு தலைநகர் அயோத்தையாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பாங்காக் நகருக்கு பெயர்ந்தது. அது முதல் பாங்காக் நகரமே தாய்லாந்தின் பரந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கி வருகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


அயோத்தையாவின் பெயர் நமக்கு அயோத்தியை ஞாபகப் படுத்தலாம்.

இந்திய நிலப்பரப்பில் ராம ராஜ்ஜியம் விளங்கிய நகரான அயோத்தியின் பெயர் அடிப்படையில் அமைந்தது தான் தாய்லாந்தின் அயோத்தையா நகரம்.  ராமாயணக் காப்பியம் தாய்லாந்தில் ராமாக்கியன் என்ற பெயரில் சற்றே மாறுபட்ட கதையம்சங்களுடன் மக்கள் வாழ்வில் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகத் திகழ்கின்றது. தாய்லாந்தின் மன்னர்கள் பெயர்களைப் பார்க்கும் போது, பல நூற்றாண்டுகளாக ராமா என்ற பெயர் மன்னர்களின் பெயருடன் இணைந்திருப்பதை நன்கு காண முடியும்.

தாய்லாந்து அரச பரம்பரையில் மன்னராக முடிசூடும் நாளில் அம்மன்னன் தன்னை ராமராக நினைத்து தான் அமைக்கும் ராஜ்ஜியம் ராமராஜ்ஜியமாக இருக்கும் என உறுதி மொழி கூறி ஆட்சிப்பொறுப்பை எற்கின்றார். இங்கு தெய்வமும் அரசரும் இரு வேறு பொருளாக இருந்தாலும் இரண்டும் இணைந்த முக்கியத்துடன் திகழ்வதாக உருவாக்கம் செய்யப்பட்டு ராம அவதாரமே மன்னர் என்ற நிலையில் மக்கள் மன்னரை மரியாதை செலுத்தும் பண்பு அமைந்திருக்கின்றது. மன்னரின் சமயமாக ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் கலந்த வடிவிலான புத்த மதமே திகிழ்கின்றது.

இன்றும் கூட பாங்காக் நகரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர் பூமிபோல் 8ம் ராமா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் மிக ஆழமான அன்புடன் இவர் விளங்குகின்றார். இவர் மக்கள் நலனுக்காக பல முயற்சிகளைச் செய்தவர். இவரும் இவரது துணைவியாரும், மகளும் உள்ளூர் மக்களால் மிக விரும்பப்படுபவர்கள். சேவை மன்ப்பான்மை மிக மிக அதிகமாக உடையவர்கள். இதில் விதி விலக்காக மன்னரின் மகன் கருதப்படுகின்றார். ஆயினும் பொதுமக்கள், மன்னர், பேரரசியார், இளவரசியார் பெயரில் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் அளவற்றது என்பதை நேரில் நான் அங்கிருந்த பொழுதில் உணர்ந்தேன். குறிப்பாக வடக்கு தாய்லாந்தில் மலைப்பகுதியில் ஒரு பயணத்தின் போது அங்கு ஒரு முறை வந்திருந்த அரசியாரை தெய்வமாக மக்கள் வணங்கி அவரை வரவேற்று  உபசரித்து மக்கள் மகிழ்வித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சரியம் கொண்டேன்.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்

எங்கள் அயோத்தையா பயணத்தில் முதலில் வாட் யாய் சாய் மொங்கோன் சென்றடைந்தோம். அப்போது காலை மணி ஏறக்குறை 10.40 ஆகியிருந்தது. இந்த வாட் யாய் சாய் மொங்கோன் என்ப் பெயர்க் கொண்ட புத்த விகாரை பல வெவ்வேறு பகுதிகளாக அமைந்தவை. ஒவ்வொன்றாகக் காண சற்றே நேரம் எடுக்கும் என்பதால் 10 நிமிடங்கள் எங்களுக்கு விளக்கமளித்து விட்டு 30 நிமிடங்கள் ஆலயத்தை முழுதாகச் சுற்றிப் பார்த்து வர அனுமதி அளித்தார் எங்கள் பயன வழிகாட்டி. ஆலயத்தின் அழகில் நான் என்னை மறந்தேன்!

தொடரும்

No comments:

Post a Comment